X

சனாதனம் பற்றிய சர்ச்சை பேச்சு வழக்கு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமின் வழங்கப்பட்டது

சென்னை தேனாம்பேட்டையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் டெங்கு, மலேரியா, கொரோனா போன்றது தான் சனாதன தர்மம். இது சமூக நீதிக்கும், சமுத்துவத்துக்கும் எதிரானது. எனவே சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பெங்களூரு பெருநகர 42-வது மக்கள் பிரதிநிதிகளுக்கான கோர்ட்டில் சமூக ஆர்வலர் பரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கோர்ட்டு நோட்டீசு அனுப்பியது.

இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோர்ட்டில் ஆஜராவதற்காக நேற்று இரவு பெங்களூருக்கு சென்றார். இன்று காலையில் அவர் மக்கள் பிரதிநிதிகளுக்கான கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது தி.மு.க. தரப்பு வக்கீல்கள் உடனிருந்தனர். மேலும் அவருடைய வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக கோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமின் வழங்கி கர்நாடக மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.