Tamilசெய்திகள்

சதுப்பு நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கான ராம்சர் உடன்பாட்டின்படி சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டம் கரிக்கிலி பறவைகள் சரணாலயம், கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை உலக முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

ராம்சர் தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டது என்பதாலேயே பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி, கரிக்கிலி பறவைகள் சரணாலயம், பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை மேம்பட்டு விடாது. அதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு மேற்கொள்வதன் மூலம் தான் அவற்றின் மேம்பாட்டை சாத்தியமாக்க முடியும்.

குறிப்பாக பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி காணாமல் போவதற்கு முன் அதை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஒரு காலத்தில் அடையாற்றின் உட்புறத்தில் தொடங்கி பக்கிங்காம் கால்வாய் வரையிலும், கிண்டி முதல் சிறுசேரி வரையிலும் 15,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆக்கிரமிப்புகள் காரணமாக இப்போது 1725 ஏக்கராக சுருங்கி விட்டது.

கரிக்கிலி பறவைகள் சரணாலயம், பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவையும் முறையாக பராமரிக்கப்பட வில்லை. ஈர நிலங்களை முறையாக பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாமல், அவற்றுக்கு எத்தகைய தகுதி பெற்றுத் தரப்பட்டாலும் கூட அதனால் எந்த பயனும் ஏற்படாது.

எனவே, ஈர நிலங்களை பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமாகும். தமிழகத்தில் உள்ள அனைத்து சதுப்பு நிலங்களின் எல்லைகளை வகுத்து, இனியும் ஆக்கிரமிப்புகள் நடக்காமல் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.