Tamilசெய்திகள்

கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் செயலாளராக இருப்பவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தீவிர ஆதரவாளர் ஆவார். என்ஜினீயர் சந்திரசேகரின் வீடு கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ளது.

இந்த வீட்டுக்கு இன்று காலை வருமானவரித்துறை அதிகாரிகள் 8 பேர் வந்தனர். அவர் வீட்டில் சோதனை நடத்தினர். பல்வேறு ஆவணங்களை கேட்டு அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையை முன்னிட்டு என்ஜினீயர் சந்திரசேகர் வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் 2 முறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்ட போது சந்திரசேகரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அப்போது சோதனை நடந்தது. தற்போது வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

என்ஜினீயர் சந்திரசேகரின் மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.