Tamilவிளையாட்டு

கோலி புகைப்படத்துடன் செயின் அணிந்த பாகிஸ்தான் ரசிகை – வைரலாகும் புகைப்படங்கள்

உலக கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் நேற்று முன்தினம் நியூயார்க் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான் ரசிகை ஒருவர், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் படம் மற்றும் அவரது ஜெர்சி எண் 18 ஆகியவற்றை குறிப்பிடும் வகையில் அணிந்திருந்த செயின் (லாக்கெட்) இணையத்தில் வைரலானது. அவரது படத்துடன் வைரலான வீடியோவில், நியூயார்க் மைதானத்தில் விராட் கோலியின் படத்துடன் கூடிய லாக்கெட்டை கழுத்தில் அணிந்திருந்த பாகிஸ்தான் ரசிகை என பதிவிடப்பட்டிருந்தது.

இந்த ரசிகை ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பையின் போதும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தை பார்க்க வந்திருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளையும் நான் ஆதரிக்கிறேன் என அவர் பேட்டி அளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது அவர் கோலி படத்துடன் கூடிய லாக்கெட்டை அணிந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கேமரா கவனத்திற்காக இவ்வாறு நடப்பதாக ஒரு பயனரும், கோலி ஒரு உலகளாவிய ஐகான் என சில பயனர்களும் பதிவிட்டு வருகின்றனர்.