X

கொலை வழக்கில் தொடர்பு! – பிரபல நடிகர் தர்ஷன் கைது

கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி கன்னடா திரையுலகின் முன்னணி நடிகர் தர்ஷன் தூகுதீபா கைது செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில் மேலும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் தர்ஷன் தூகுதீபா கைது செய்யப்பட்டதை பெங்களூரு காவல் துறை துணை ஆணையர் கிரிஷ் உறுதிப்படுத்தி இருக்கிறார். எனினும், இந்த விவகாரம் தொடர்பாக வேறு எந்த தகவலையும் அவர் வழங்கவில்லை.

மைசூருவில் உள்ள சம்ராஜேந்திரா விலங்கியல் பூங்கா அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து போலீசார் அவரை பெங்களூரு அழைத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சித்ரதுர்காவை சேர்ந்த ரேனுகாசுவாமி என்ற நபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய மூன்று பேருடன் நடிகர் தர்ஷனுக்கு பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ரேனுகாசுவாமியின் சடலம் பெங்களூருவை அடுத்த காமாக்ஷிபாளையத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்தது குறிப்பிடத்தக்கது.