Tamilசெய்திகள்

கொரோனா பாதிப்புள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா பாதிப்பு விகிதம், தேசிய அளவில் 5 சதவீதத்துக்குள் இருந்தாலும், சில மாநிலங்களில் குறிப்பிட்ட மாவட்டங்களில் இது 10 சதவீதத்தைத் தாண்டி இருக்கிறது. இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த வகையில் ராஜஸ்தான், மணிப்பூர், சிக்கிம், திரிபுரா, மேற்கு வங்காளம், புதுச்சேரி, ஒடிசா, மேகாலயா, மிசோரம், நாகலாந்து, கேரளா, அருணாசலபிரதேசம், இமாசல பிரதேசம், அசாம் ஆகிய 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது.

இந்த கடிதத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறி இருப்பதாவது:-

ஜூன் 21-27 தேதிகளுக்கு இடையே கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள மாவட்டங்களில், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

நாடு முழுவதும் கொரோனா வீழ்ச்சி அடைந்து வருவதால், மாவட்ட அளவிலும், துணை மாவட்ட அளவிலும் நடவடிக்கைகள் வாயிலாக கொரோனா நிலவரம் குறித்து கடுமையான கண்காணிப்பு நடத்த வேண்டியது அவசியம் ஆகும்.

எனவே மாநிலம் முழுவதும் நெகிழ்வுத்தன்மையையும், தளர்வுகளையும் அனுமதிக்கிறபோது மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளவாறு 10 சதவீதத்துக்கும் மேலாக பாதிப்பு விகிதம் கொண்ட மாவட்டங்களில் புதுச்சேரியின் மாஹி, கேரளாவின் பாலக்காடு, மலப்புரம், கொல்லம், திரிச்சூர், திருவனந்தபுரம் ஆகியவையும் அடங்கும்.