Tamilசெய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் விரைவாக செலுத்திக்கொள்ள வேண்டும் – சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 306 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 1697 நபர்கள் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் கொரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணியும்படி மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் சளி போன்ற கொரோனா தொடர்பான அறிகுறி உள்ள நபர்கள் குறித்த விவரங்களை தெரியப்படுத்த ஏற்கனவே கடிதம் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 448 தனியார் மருத்துவமனைகள் மற்றும் பொது சிகிச்சை செய்யும் மையங்களின் சார்பில் விவரங்கள் பெறப்பட்டு வருகிறது. 19.6.2022 அன்று தனியார் மருத்துவமனைகளிலிருந்து காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சை பெற்ற 227 நபர்களின் விவரம் பெறப்பட்டுள்ளது.

இவற்றில் ராயபுரம் மண்டலம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தனியார் மருத்துவமனைகளிலிருந்து மிக குறைந்த அளவிலான எண்ணிக்கையில் விவரங்கள் பெறப்படுகின்றன. இந்த மண்டலங்களை சார்ந்த பூச்சியியல் வல்லுநர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்து விவரங்களை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்களின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம் என்ற அளவில் உள்ளது. முன் எச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், இணைநோய் உடைய நபர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் எண்ணிக்கை சுமார் 5 லட்சம் என்ற அளவில் உள்ளது.

எனவே பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாத நபர்களும், முன் எச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் தங்களுக்கு அருகாமையில் உள்ள மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களை அணுகி கொரோனா தடுப்பூசியினை செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.