Tamilசெய்திகள்

கொரோனா உருமாற்றத்தை தடுக்க முடியும் – நிபுணர்கள் குழு தகவல்

கொரோனா வைரஸ் இதுவரை ஆயிரக்கணக்கான உருமாற்றங்களை அடைந்துள்ளது. இந்தியாவில் 2 முறை உருமாறிய கொரோனா வைரசான டெல்டா தாக்கியதால்தான் 2-வது அலை உருவானது.

உருமாற்றம் அடையும் வைரஸ்களில் ஒருசில மட்டும் அதிக வீரியம் கொண்டவையாக உருவாகி விடுகின்றன. அவற்றால் தான் பாதிப்பு அதிகமாகிறது.

இந்த வைரஸ்கள் உருமாற்றம் அடைவதற்கு மனித உடலில் உள்ள குறைபாடுகள்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. அதாவது நோய் எதிர்ப்பு சக்திகள் குறைந்த பலவீனமான நபர்களை வைரஸ்கள் தாக்கும் போது அவை உருமாற்றம் அடைவது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக புற்றுநோய், எய்ட்ஸ், காசநோய் போன்றவை தாக்கியவர்கள் ஏற்கனவே நோய் எதிர்ப்பாற்றல் குறைந்து பலவீனமானவர்களாக இருப்பார்கள். இவ்வாறு இணை நோய் உள்ளவர்களை தாக்கும் வைரஸ்கள் உருமாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

எனவே பலவீனமாக உள்ளவர்களுக்கு கூடுதல் சிகிச்சை அளிப்பதுடன், தடுப்பூசிகளை செலுத்தினால் கொரோனா வைரஸ் உருமாற்றத்தை தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மருத்துவ பத்திரிகையில் இதுபற்றிய ஆராய்ச்சி கட்டுரை வெளிவந்துள்ளது. எனவே பலவீனமாக உள்ளவர்களுக்கு நோய் தொற்றாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.