Tamilசெய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.வாலியா மரணம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி மாநில முன்னாள் அமைச்சருமான ஏ.கே.வாலியா (வயது 72) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மாநில காங்கிரஸ் தலைவர் அனில் குமார் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏ.கே.வாலியா டெல்லியில் நேர்மறையான அரசியலை ஊக்குவித்ததாக துணை முதல்வர் சிசோடியா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து 4 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாலியா, ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, மந்திரியாக பதவி வகித்துள்ளார். சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு, நிலம் மற்றும் கட்டிடம் ஆகிய துறைகளை கவனித்துள்ளார்.

டெல்லியில் பிறந்த அவர் தொழில் ரீதியாக ஒரு மருத்துவர் ஆவார். 1972-ல் இந்தூரில் உள்ள எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார்.