Tamilசெய்திகள்

கேரள வாலிபர் குரங்கு அம்மை நோயால் இறந்தாரா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது:-

ரூ.3.8 லட்சம் செலவில், ஆஸ்பத்திரி மருத்துவக் கல்லூரிகளுக்கு வருகிற தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு 3 தங்கும் அறைகள், ரூ.5.85 லட்சத்தில் விசாகா குழு அலுவலகம், அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரிகிற டாக்டர்களுக்கு உணவருந்துவதற்கும், இடைவெளி நேரங்களில் ஓய்வு எடுப்பதற்கும் ரூ.18.5 லட்சத்தில் 2 அறைகள், அதே போல் ரூ.6.8 லட்சம் செலவில் சுற்றுச்சுவருடன் கூடிய ராட்சத மீன் தொட்டி, ரூ.14.9 லட்சம் செலவில் சிறப்பு சிகிச்சை அறை ஒன்றும் இன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மருத்துவ கல்வியாளர்களுக்கு தங்களது கற்பிக்கும் திறனை வளர்க்க இந்தியா முழுவதும் மருத்துவர்களுக்கு தொழில்நுட்பத்திற்கான தேசிய மருத்துவ கவுன்சிலின் மூலம் மண்டல மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் வைக்கப்பட்டிருந்தது.

முதல்முறையாக மாநில அரசாங்கங்கள் நடத்துகின்ற மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளுக்கு 2 இடங்களில் மண்டல மையம் அமைக்க மத்திய அரசு, வாய்ப்பு அளித்துள்ளது. அந்தவகையில் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு மருத்துவக் கல்லூரிகள் 4-ம், தனியார் கல்லூரிகள் 7-ம், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து தலா 2 ஆஸ்பத்திரிகளும் இன்று இணைக்கப்பட்டு 15 மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், பயிற்சி பெறுவதற்கான மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் குரங்கு அம்மை நோயால் வாலிபர் ஒருவர் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார் என்பது உறுதி படுத்தப்படவில்லை. கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் இதுகுறித்து பேசும்போது, உயிரிழந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருந்தது உண்மை தான். ஆனால் அதனால் தான் அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் பாதிப்பால் உயிரிழந்தாரா? என்பது குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். விரைவில் இது குறித்து தெரிய வரும் என்றார்.

ஆப்பிரிக்க நாடுகளை தவிர்த்து ஏறக்குறைய 77 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்புள்ளது. இந்த நாடுகளில் இதுவரை குரங்கு அம்மையால் இறப்பு பதிவாகவில்லை. இந்தியாவில் முதல்முறையாக அவ்வாறு ஏற்பட்ட இறப்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதுவரை இதை குரங்கு அம்மைக்கான இறப்பு என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஆய்வறிக்கை வந்த பிறகு தான் ஏற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.