Tamilசெய்திகள்

குரூப் – 1 முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது – மூன்றரை லட்சம் பேர் எழுதுகிறார்கள்

துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டு இருந்தது.

முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் முதல்நிலைத் தேர்வு இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை எழுதுவதற்காக 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், அதில் 2 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டு, 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வை எழுத தகுதியுள்ளவர்களாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் இந்த தேர்வு நடக்கிறது. பொதுப்பாடம் பிரிவில் 175 வினாக்கள் திறனறிவு பிரிவில் 25 வினாக்கள் என 200 வினாக்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வை எதிர்கொள்ளும் தேர்வர்கள் என்ன மாதிரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்? என்பது தொடர்பான முழு விவரங்களை ஹால்டிக்கெட்டில் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.