குஜராத் முதல் மேகலாயா வரை மீண்டும் நடைப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களை கடந்து சென்றது.

மொத்தம் 136 நாட்கள் நடைபெற்ற இந்த பாத யாத்திரை காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. இந்நிலையில், ராகுல் காந்தி மீண்டும் குஜராத் முதல் மேகாலயா இடையே நடைபயணம் மேற்கொள்ள உள்ளார் என மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.யாக பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டார். கட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக மீண்டும் ஒற்றுமை யாத்திரையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளார். இம்முறை குஜராத் மாநிலத்திலிருந்து மேகலாயா வரை நடைபயணம் மேற்கொள்ளலாம்.

இதில் பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர். ராகுல் காந்தி குஜராத் முதல் மேகாலயா இடையே நடைபயணத்தை தொடங்கும்போது, நாங்களும் மகாராஷ்டிராவில் நடைபயணம் தொடங்க உள்ளோம். அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி நடைபயணத்தை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளது. ராகுல் காந்தி நடைபயணம் தொடர்பான தேதி விரைவில் அறிவிக்கப்டும்.

மாநில காங்கிரஸ் சார்பில் விதர்பாவில் எனது தலைமையில் நடைபயணம் நடைபெறும். மேற்கு விதர்பாவில் எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் தலைமையிலும், மேற்கு மகாராஷ்டிராவில் முன்னாள் முதல் மந்திரி பிருத்விராஜ் சவான் தலைமையிலும், நிதி தலைநகரான மும்பையில் வர்ஷா கெய்க்வாட் தலைமையிலும் நடைபயணம் நடைபெறும்.

மராத்வாடாவில் முன்னாள் முதல் மந்திரி அசோக் சவான் தலைமையிலும், வடக்கு மகாராஷ்டிராவில் பாலாசாகிப் தோரட் பொறுப்பிலும் நடைபயணம் நடைபெறும். மாநிலத்தில் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news