Tamilசெய்திகள்

குஜராத் பாலம் விபத்து – நாளை மாநிலம் முழுவதும் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த 26-ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. ஆனால் 5 நாட்களில் பாலம் திடீரென நேற்று முன்தினம் இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தியது.

இந்த பால விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 பேர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, குஜராத் பால விபத்து நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் குஜராத்தின் காந்திநகரில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில் சம்பவம் நடந்தது முதல் இதுவரை மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரண பணிகள் பற்றி பிரதமர் மோடியிடம் விளக்கி கூறப்பட்டன. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளும் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தி உள்ளார். இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குஜராத் முதல் மந்திரி பூபேந்திர பட்டேல் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், குஜராத்தில் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நவம்பர் 2-ம் தேதி (நாளை) மாநிலம் முழுவதும் துக்கம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய கொடி மாநிலத்தில் உள்ள அரசு கட்டிடங்களில் அரை கம்பத்தில் பறக்க விடப்படும். குஜராத்தில் அன்று ஒரு நாள் விழாக்களோ, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோ எதுவும் நடைபெறாது என பதிவிட்டுள்ளார்.