Tamilசெய்திகள்

காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் டிஜிட்டல் தீர்வுகள் உதவியாக இருக்கும் – பிரதமர் மோடி பேச்சு

இந்தோனேசியாவில் நடந்து வரும் ஜி-20 மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று பிரதமர் மோடி பேசியதாவது:-

டிஜிட்டல் மாற்றம் என்பது நமது சகாப்தத்தின் குறிப்பிடத்தக்க மாற்றமாக இருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களை முறையாக பயன்படுத்துவது வறுமைக்கு எதிரான பல சகாப்தகால உலகளாவிய போராட்டத்தின் சக்தியை பெருக்கும். காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் டிஜிட்டல் தீர்வுகள் உதவியாக இருக்கும். இந்தியாவில் டிஜிட்டல் அணுக்கலை பொதுவெளியில் உருவாக்கி இருக்கிறோம். ஆனால் சர்வதேச அளவில் இன்னும் பெரிய டிஜிட்டல் பிளவு உள்ளது.

டிஜிட்டல் கட்டமைப்பை உள்ளடக்கியதாக உருவாக்கினால் அது சமூக, பொருளாதார மாற்றங்களை கொண்டு வரமுடியும் என்பது இந்தியாவின் கடந்த சில ஆண்டுகால அனுபவம் காட்டுகிறது. இந்தியா டிஜிட்டல் பொது பொருட்களை உருவாக்கி உள்ளது. அதன் அடிப்படை கட்டமைப்பு ஜனநாயக கொள்கைகளை கொண்டுள்ளது.

ஜி-20க்கு தலைமை ஏற்கும் இந்தியாவின் கருப்பொருளாக ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று இருக்கும். டிஜிட்டல் மாற்றத்தின் பலன்கள் மனித இனத்தின் சிறிய பகுதிக்கு மட்டும் செல்லக்கூடாது என்பது ஜி-20 தலைவர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.