Tamilசெய்திகள்

காந்தி பிறந்தநாள் – முதலமைச்சர், துணை முதலமைச்சர் புகழாரம்

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதேபோல் கர்மவீரர் காமராஜரின் நினைவு தினமும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மகாத்மா காந்தி பிறந்தநாள், காமராஜர் நினைவுநாளான இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

அறவழியில் போராடி சுதந்திரம் பெற்று அகிம்சையின் மகத்துவத்தையும், சிறப்பையும் உலகறியச் செய்தவர் மகாத்மா காந்தி. அவரது பிறந்த தினத்தில் அவரை போற்றி வணங்கி மகிழ்கிறேன்.

தம் வாழ்நாள் முழுமையையும் சமூகத் தொண்டாற்றுவதற்காகவே அர்ப்பணித்து தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாளில் அவரை வணங்குகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

அகிம்சை என்னும் ஆயுதம் ஏந்தி அறவழியில் போராடி இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டவர் காந்தி.

கல்விக்கண் திறந்த கர்மவீரர், பட்டிதொட்டி எங்கும் பள்ளிகள் தந்த கல்வி வள்ளல் காமராஜர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.