Tamilசெய்திகள்

காங்கிரசின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது – அமைச்சர் அமித்ஷா பேச்சு

நாகாலாந்து சட்டசபை தேர்தலையொட்டி, மான் டவுன் என்ற இடத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி, உலகம் முழுவதும் மதிக்கப்படுபவர். நாட்டின் 80 கோடி ஏழைகள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை உண்டாக்கியவர். அப்படிப்பட்ட எங்கள் அன்புக்குரிய தலைவர் பற்றி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் பயன்படுத்திய வார்த்தை கண்டனத்துக்குரியது.

ராகுல்காந்தி தலைவர் ஆனதில் இருந்து காங்கிரசின் தரம் நாளுக்குநாள் சரிந்து வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தொலைநோக்கி வைத்து பார்த்தால் கூட காங்கிரசை பார்க்க முடியாது என்று ராகுல்காந்திக்கு சொல்லிக் கொள்கிறேன். அந்த அளவுக்கு ஓட்டுச்சீட்டு மூலமாக மக்கள் பதில் அளிப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா, சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் அதானியை பிரதமர் மோடியுடன் தொடர்புபடுத்தும்வகையில், ‘நரேந்திர கவுதம்தாஸ் மோடி’ என்று பிரதமர் பெயரை குறிப்பிட்டார். அதற்குத்தான் அமித்ஷா கண்டனம் தெரிவித்ததாக தெரிகிறது.