Tamilசெய்திகள்

கவர்னர், மத்திய அரசு மற்றும் பா.ஜ.க மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கைப்பாவைகள் – முதலமைச்சர் சித்தராமையா தாக்கு

கர்நாடக மாநிலத்தில் முடா மோசடி வழக்கு விசுவரூபம் எடுத்துள்ளது. சித்தராமையா மனைவிக்கு மனை ஒதுக்கியதில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் குற்றம்சாட்டி வருகின்றன.

இது தொடர்பாக வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான டி.ஜே. ஆப்ரஹாம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் அடிப்படையில் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் அனுமதி வழங்கக் கூடாது? இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீஸ் தொடர்பாக கர்நாடக மாநில கேபினட் ஆலோசனை நடத்தியது. கவர்னர் நோட்டீஸை திரும்பப்பெற வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் மத்திய அரசு மற்றும் பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கைப்பாவை என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார். கவர்னர் நோட்டீஸ் அனுப்பியது சட்டவிரோதம். அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார்.