Tamilசினிமா

கல்லூரி மாணவர்கள் கொண்டாடும் ‘காலேஜ் ரோடு’ திரைப்படம்!

லிங்கேஷ், ஆனந்த் நாக், மோனிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலேஜ் ரோடு’. ஜெய் சமர் சிங் இயக்கியிருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பள்ளி படிப்பை முடித்த ஏழை, எளிய மாணவர்கள் தங்களின் கல்லூரிப் படிப்புக்காக முதலில் நாடுவது கல்விக் கடன் தான். ஆனால், அனைத்து ஏழை மாணவர்களுக்கும் கல்விக் கடன் கிடைத்து விடுவது இல்லை. ஏழை மாணவர்களுக்கு கிடைக்காத கல்விக் கடன் பற்றியும், கல்விக் கடன் கொடுக்க வேண்டிய வங்கிகள் கடன் வாங்கிய மாணவர்களை எப்படி நடத்துகிறது என்பதை பற்றியும் காலேஜ் ரோடு திரைப்படம் பேசுகிறது.

இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் முன்னதாக கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்துக்கொண்ட படம் பார்த்தனர்.

படத்தை பார்த்து கொண்டாடிய மாணவர்கள், கண்கலங்கவும் செய்தார்கள். அந்த வகையில் படம் அவர்களை உணர்வுப்பூர்வமாக பாதித்திருந்தது.

படம் குறித்து கருத்து கூறிய மாணவர்கள், “நாங்கள் சாதாரண கல்லூரி காதல் கதையாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தோம். ஆனால் படத்தை பார்த்த பின்பு எங்களால் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை.” என்றனர்.

“முதல் பாதியில் எங்களை சிரிக்க வைத்து, இரண்டாம் பாதியில் அழ வைத்த ‘காலேஜ் ரோடு’ கல்லூரி மாணவர்கள் மட்டும் அல்ல அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டிய படம்” என்றும் மாணவர்கள் கூறினார்கள்.

மேலும், அரசு ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினாலும் ஒருசில மோசமான வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் அதன் பலன் நன்றாக படிக்கும் ஏழை மாணவனுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது என்றும் சில மாணவர்கள் ஆதங்கத்துடன் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.