Tamilசெய்திகள்

கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அங்கு படிக்கும் மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த பிரச்சினை இன்று தமிழக சட்டசபையிலும் கிளப்பப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), எஸ்.எஸ்.பாலாஜி (விடுதலை சிறுத்தைகள் கட்சி), செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்), அருள் (பா.ம.க.), ராமச்சந்திரன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) ஆகியோர் பேசினார்கள்.

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டு உள்ள மாணவிகளுக்கு நீதி வழங்க வேண்டும். மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை நடைபெறுவதாக தகவல் வெளியாகி வருகிறது. எனவே இதில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் பேசினார்கள்.

இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

கலாஷேத்ரா பவுண்டேஷன் விவகாரம் குறித்து உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, தி.வேல்முருகன், கு.செல்வப்பெருந்தகை, ராமச்சந்திரன் ஆகியோர் அவையினுடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையிலே இங்கே உரையாற்றி இருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை உங்கள் அனுமதியோடு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

ஒன்றிய அரசினுடைய கலாச்சாரத் துறையின்கீழ் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய, கலாஷேத்ரா பவுண்டேஷன் விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், தேசிய மகளிர் ஆணையம் முதலில் தானாக முன்வந்து “பாலியல் தொல்லை” என டுவிட்டர் செய்தி போட்டு, 21-3-2023 அன்று நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பி.-க்கு கடிதம் எழுதியது.

இது தொடர்பாக, கலாஷேத்ரா பவுண்டேஷன் இயக்குநர், நமது மாநில காவல்துறைத் தலைவரை சந்தித்து, தங்களது நிறுவனத்தில் பாலியல் புகார் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். பிறகு தேசிய மகளிர் ஆணையமே செய்தியின் அடிப்படையில் விசாரித்தோம்; அந்த விசாரணையை முடித்து வைத்து விட்டோம்” என 25-3-2023 அன்று டி.ஜி.பி.-க்குக் கடிதம் எழுதி தெரிவித்து இருக்கிறார்கள்.

பின்னர், கடந்த 29-3-2023 அன்று மீண்டும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரே வந்து கலாஷேத்ராவில் இருக்கக்கூடிய 210 மாணவிகளிடம் விசாரித்து விட்டுச் சென்று உள்ளார். அப்போது காவல்துறை தங்களுடன் வரத் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.

இந்த நிலையில், மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் விளைவாக, கலாஷேத்ரா பவுண்டேஷனில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

இந்த விவகாரம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு, விவரங்களை அறிந்தேன். இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும் விவரங்களை அறிவதற்காக, வருவாய்க்கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டார்கள்.

இன்று காலையில், மீண்டும் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று, மாணவிகள் மற்றும் நிர்வாகத்தினருடன் பேசி வருகிறார்கள். மேலும், அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அங்கு ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

அரசை பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என தெரிவித்து அமைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.