Tamilசெய்திகள்

கர்நாடக மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இன்று பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

கர்நாடகாவின் யாத்கிரி மாவட்டத்திற்கு செல்லும் பிரதமர் அங்கு ஜல் ஜீவன் இயக்கத்தின்கீழ் பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். குடிநீர், பாசனம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்கிறார். கலபுரகி மாவட்டத்திற்கு செல்லும் பிரதமர் அங்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

கர்நாடக பயணத்தை முடித்துக் கொண்டு மகாராஷ்டிரா செல்லும் பிரதமர் மோடி அங்கு 38,800 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மாலையில் மும்பை செல்லும் பிரதமர், அங்கு பல்முனை வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மும்பை மெட்ரோவின் இரண்டு வழி ரெயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர், மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்கிறார்.