Tamilசெய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை தொடங்குகிறது – பாதுகாப்பு பணியில் ஒன்றரை லட்சம் போலீசார்

224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு நாளை (புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அத்துடன் ஆம் ஆத்மி 217 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஆனால் அக்கட்சியின் தேசிய தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

ஆனால் அக்கட்சியின் வேட்பாளர்கள் பெங்களூரு உள்ளிட்ட நகர பகுதிகளில் குறிப்பிடத்தக்க ஓட்டுகள் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 27-ந் தேதி முதல் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கினர். பிரதமர் மோடி கடந்த 29-ந் தேதி தனது பிரசாரத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து 30-ந்தேதி மற்றும் கடந்த 2, 3-ந் தேதி, பின்னர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை என மொத்தம் 7 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு, பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு வேட்டையாடினார்.

பிரதமர் மோடி 18 பிரசார பொதுக்கூட்டங்களிலும், 5 ஊர்வலத்திலும் கலந்து கொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பிரதமர் மோடி பீதரில் பிரசாரத்தை தொடங்கி, மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டத்துடன் பிரசாரத்தை நிறைவு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

பீதர், விஜயாப்புரா, பல்லாரி, கொப்பல், கோலார், மண்டியா, ராமநகர், மைசூரு, பெங்களூரு, பெலகாவி, சித்ரதுர்கா, பாகல்கோட்டை, யாதகிரி, கலபுரகி, ராய்ச்சூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதே போல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கலபுரகி, பெங்களூரு, கோலார், கதக், யாதகரி, ராய்ச்சூர், பெலகாவி, உப்பள்ளி-தார்வார் என பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உப்பள்ளியில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டார்.

ராகுல் காந்தியும் கர்நாடகத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவர் பீதர், கோலார், ராய்ச்சூர், கலபுரகி, பெலகாவி, பல்லாரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் அவர் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரித்தார்.

இந்த முறை கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி முதல் முறையாக ஈடுபட்டார். அவரது வருகை காங்கிரஸ் தலைவர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரும் சிக்பள்ளாப்பூர், விஜயாப்புரா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்

உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிஆதித்யநாத், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மத்திய மந்திரிகள் கர்நாடகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

அதே போல் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர். கர்நாடக பா.ஜனதா சார்பில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்டோரும் தீவிர பிராரசம் மேற்கொண்டனர்.

ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா (வயது 90) தனது வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் சுட்டெரிக்கும் வெயிலில் ஓட்டு சேகரித்தார். அக்கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினார்.

இந்த நிலையில் கடைசி நாளான நேற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பெங்களூருவில் நேற்று பி.எம்.டி.சி. பஸ்சில் பயணம் செய்து பயணிகளுடன் கலந்துரையாடி காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினார். அத்துடன் அவர் தனது பிரசாரத்தை முடித்து கொண்டார்.

பிரியங்கா காந்தி விஜயநகர், சிக்பேட்டை தொகுதிகளில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டு காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினார். அத்துடன் பிரியங்கா காந்தி தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தான் போட்டியிடும் சிக்காவி தொகுதியில் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு, அத்துடன் தனது பிரசாரத்தை முடித்து கொண்டார்.

மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை தனது சொந்த தொகுதியான கனகபுராவில் நிறைவு செய்தார். கடைசி நாளான நேற்று சித்தராமையா, குண்டலுபேட்டை, நஞ்சன்கூடு, சாமுண்டீஸ்வரி ஆகிய தொகுதிகளில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டு அங்கு நிறைவு செய்தார்.

கடந்த 15 நாட்களாக நகரங்கள், கிராமங்கள் என்று இல்லாமல் அனைத்து பகுதிகளில் ஒலிபெருக்கி சத்தம் ஒலித்தப்படி இருந்தது. தங்களின் வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுமாறு அதில் கேட்டு கொண்டனர். தெருத்தெருவாக ஒலித்து வந்த ஒலிப்பெருக்கிகளின் சத்தம் நேற்று மாலை 6 மணியுடன் நின்றுவிட்டது.

முன்னதாக மாலை 4.30 மணி முதல் மாலை 5 மணி வரை திடீரென்று பெங்களூருவில் பலத்த மழை கொட்டியது. சில வேட்பாளர்கள் மழையை பொருட்படுத்தாமல் பிரசாரம் செய்தனர். கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பகிரங்க தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தொகுதிகளில் தங்கியிருந்த வெளியூர்காரர்கள் இடத்தை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

இனி வேட்பாளர்கள் இன்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க உள்ளனர் அதைத்தொடர்ந்து சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் விரிவாக மேற்கொண்டுள்ளது. கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர். இந்த வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அந்த வாக்குச்சாவடிகளில் வீடியா மற்றும் இணையவழி கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் பணியில் 3 லட்சத்து 51 ஆயிரத்து 153 அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள். ஒரு லட்சத்து 56 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் தேர்தல் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் தேர்தல் நடைபெறும் நாளன்று அரசு பஸ் போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்படும் என்று ஏற்கனவே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.