Tamilசெய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு

கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த மாதம் 13-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 20-ந் தேதி முடிந்தது. இங்கு 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இதில் ஆண் வேட்பாளர்கள் 2 ஆயிரத்து 430 பேரும், பெண் வேட்பாளர்கள் 184 பேரும் உள்ளனர். ஒரே ஒரு திருநங்கை வேட்பாளர் மட்டும் களத்தில் உள்ளார்.

ஆளும் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 209 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 133 தொகுதிகளிலும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. சுயேச்சையாக 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்காவி தொகுதியிலும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வருணாவிலும், முன்னாள் முதல்-மந்திரிகள் குமாரசாமி சென்னப்பட்டணாவிலும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

இந்த தேர்தலில் வாக்களிக்க 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும் உள்ளனர். 3-ம் பாலின வாக்காளர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் அடங்குவர்.

இந்த வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 37 ஆயிரம் இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்குச்சாவடிகளில் இளம் வாக்காளர்கள், பெண்கள், இனக்குழுக்கள் போன்றோருக்கு சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இனக்குழுக்கள் வாக்குச்சாவடியில் பணியாற்றிய தேர்தல் அலுவலர்கள், அந்த சமூகத்தின் கலாசார உடைகளை அணிந்து வந்திருந்தனர். இது வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.

பெண்களுக்கான ‘சகி’ வாக்குச்சாவடிகள் மாநிலம் முழுவதும் மொத்தம் 996 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் முழுக்க, முழுக்க பெண் தேர்தல் அலுவலர்கள் பணியாற்றினர். மாநிலம் முழுவதும் 239 வாக்குச்சாவடிகள் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் ரோஜாப்பூக்கள் கொடுக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதுபோல் மாநிலம் முழுவதும் மொத்தம் 239 வாக்குச்சாவடிகள் இளம் வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டு இருந்தது. அந்த வாக்குச்சாவடிகளில் இளம் வாக்காளர்களை கவரும் வகையில் முழுக்க, முழுக்க இளம் தேர்தல் அலுவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்.

திட்டமிட்டப்படி ஓட்டுப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணி முதலே பொதுமக்கள் வாக்குச்சாவடிகளை நோக்கி வந்தனர். இதனால் காலை 7.30 மணிக்கெல்லாம் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். விறுவிறுப்பான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்துவிட்டு சென்றனர். இந்த முறை வாக்காளர்களின் முகத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்களிப்பதில் ஒரு விதமான ஆர்வம் காணப்பட்டது.

பெங்களூரு சிவாஜிநகர், பேகூர், தொட்ட நாகமங்களா, மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, ஸ்ரீராமபுரா, யஷ்வந்புரம் போன்ற பகுதிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்காவியில் உள்ள அரசு கன்னட உயர் மாதிரி தொடக்கப்பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்துவிட்டு சென்றார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலபுரகியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். 92 வயதாகும் முன்னாள் பிரதமர் தேவகவுடா தனது வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது குடும்பத்தினருடன் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புராவில் வாக்களித்தார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது மனைவி அனிதா குமாரசாமி, மகன் நிகில் குமாரசாமி, மருமகள் ரேவதி ஆகியோருடன் வந்து பிடதி கேதகானஹள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். நடிகர்கள் கணேஷ், சுதீப், உபேந்திரா, யுவ ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், துருவ் சர்ஜா, யஷ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாக்களித்தனர்.

பெங்களூரு பத்மநாபநகரில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலை 12 மணியளவில் 30 பேர் கொண்ட கும்பல் உருட்டு கட்டைகளுடன் வந்தது. அங்கு இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த கும்பலை விரட்டியடித்தனர். இதைத்தவிர பெங்களூரு மாநகரில் ஓட்டுப்பதிவு எந்த விதமான வன்முறையும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறிய அளவில் வன்முறைகள், வாக்குவாதங்கள், தள்ளுமுள்ளுகள் நடைபெற்றன.

பெரும்பாலும் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது. விஜயாப்புரா மாவட்டம் மசபிநாலா கிராமத்தில் ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வட்ட அதிகாரி காரில் கூடுதல் மின்னணு வாக்கு எந்திரங்களுடன் வந்தார். இதை பார்த்த கிராம மக்கள், தேர்தலில் ஏதோ முறைகேடு செய்ய வந்திருப்பதாக கருதி சந்தேகம் அடைந்து அந்த காரை தடுத்து நிறுத்தினர். அதில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்கு எந்திரங்களை வெளியே எடுத்து நடுரோட்டில் போட்டு அடித்து உடைத்து நொறுக்கினர். இதில் அந்த எந்திரங்கள் துண்டு, துண்டாக உடைந்து நொறுங்கியது.

மேலும் அந்த காரையும் குண்டுக்கட்டாக தூக்கி கவிழ்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆனந்த்குமார், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அங்கு போலீஸ் படையும் விரைந்து வந்தது. வன்முறையில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் படை அங்கு வந்த பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. மொத்தம் 2 மின்னணு வாக்கு எந்திரங்கள், 2 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 3 வி.வி.பேட் எந்திரங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்தன.

அதே நேரத்தில் அங்கு அந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. அதில் எந்த தடையும் ஏற்படவில்லை. கோலார் மாவட்டம் குமனி கிராமத்தில் காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரின் மண்டை உடைந்தது. சித்தராமையா போட்டியிடும் வருணாவுக்கு பா.ஜனதா வேட்பாளர் சோமண்ணா வந்தார். அவர் வாக்குச்சாவடி ஒன்றில் ஆய்வு செய்தார். அப்போது, பா.ஜனதா, காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கா்நாடகத்தில் மிக அதிக வாக்காளர்களை கொண்ட பெங்களூரு தெற்கு தொகுதிக்கு உட்பட்ட தொட்ட நாகமங்களாவில் 8 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரே ஒரு வாக்குச்சாவடி மட்டுமே அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் அங்கு வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வாக்காளர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து வாக்களித்து சென்றனர். இதனால் அவா்கள், தேர்தல் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பெலகாவி மாவட்டம் கித்தூரில் 9 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு திடீரென நிறுத்தப்பட்டது. அங்கு மின்னணு வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து வாக்குப்பதிவு பாதியில் நின்றது. இதனால் அங்கு வாக்காளர்கள் 2 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்தனர்.

இதன் காரணமாக வாக்காளர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். காலை 9 மணி நிலவரப்படி ஓட்டுப்பதிவு 8.26 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதமும், மதியம் 1 மணி நிலவரப்படி 37.25 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 52.18 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கொன்றும், இங்கொன்றுமான சம்பவங்களை தவிர்த்து, மற்ற இடங்களில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மொத்தம் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த தேர்தலில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாயின. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் பா.ஜனதா 104 இடங்களையும், காங்கிரஸ் 80 தொகுதிகளையும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 37 இடங்களையும் கைப்பற்றின. அப்போது எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(13-ந் தேதி) நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.