கர்நாடக இடைத்தேர்தல் – பா.ஜ.கவுக்கு ஆதரவு கொடுக்க ரெடியாகும் குமாரசாமி

கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந் தேதி 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குறைந்தபட்சம் 6 தொகுதிகளை கைப்பற்றினால் மட்டுமே எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும். இதனால் இந்த இடைத்தேர்தலை வாழ்வா, சாவா என்று பார்க்கும் நிலையில் பா.ஜனதா உள்ளது.

எதிர்கட்சிகளும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தங்களது செல்வாக்கை நிரூபிக்கும் நிலையில் உள்ளன. இந்த நிலையில் பா.ஜனதா அரசுக்கு ஆதரவு கொடுக்கப்போவதாக குமாரசாமி அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து விஜயநகராவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் குமாரசாமி பேசியதாவது:-

கர்நாடகாவில் சட்டப்பேரவைக்கு தேர்தல் வருமா என்ற கேள்விக்கே இடமில்லை. மக்கள் மீது மற்றொரு தேர்தலை சுமத்துவதை தவிர்க்க இடைத்தேர்தலில் பெரும் பான்மைக்கு தேவையான இடங்களை பா.ஜனதா பெற தவறினால் அந்த ஆட்சிக்கு ஆதரவு அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதசார்பற்ற ஜனதாதள ஆதரவு தேவையில்லை என்று எடியூரப்பா கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.

இதற்காக காங்கிரஸ் இல்லாத கர்நாடகாவை முதலில் உருவாக்க வேண்டும். இது எங்கள் லட்சியம். எனது அரசுக்கு எந்த கட்சியின் ஆதரவும் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news