Tamilசெய்திகள்

கர்நாடகத்தில் எக்ஸ்.பி.பி.1.5 வகை கொரோனாவால் ஒருவர் பாதிப்பு

கர்நாடகத்தில் நேற்று 13 ஆயிரத்து 201 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 24 பேருக்கும், கோலாரில் 3 பேருக்கும், சித்ரதுர்கா, ஹாசன், மண்டியா, உடுப்பி, உத்தரகன்னடா, ராய்ச்சூர், பெலகாவியில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 309 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு விகிதம் ஒன்றுக்கும் கீழ் உள்ளது. சீனா, அமெரிக்காவில் வேகமாக பரவும் ‘பி.எப்.-7’ என்ற புதிய வகை கொரோனா இந்தியாவிலும் பரவியுள்ளது. அதாவது குஜராத், ராஜஸ்தானில் அந்த புதிய வகை வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகத்திலும் ஒருவருக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அது ‘எக்ஸ்.பி.பி.1.5’ வகையை சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கர்நாடகத்தில் தீவிரமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி விடுமா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.