Tamilசெய்திகள்

கப்பலில் இருந்து நீண்ட தூரம் சென்று நிலப்பரப்பில் தாக்க கூடிய ஏவுகணை சோதனை

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) பல்வேறு ஏவுகணைகளை சோதனை நடத்தி உள்ளது.

இந்தநிலையில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு ஐ.டி.சி.எம். என்ற ஏவுகணையை உருவாக்கி உள்ளது. இது கப்பலில் இருந்து நீண்ட தூரம் நிலப்பரப்பை சென்று தாக்க கூடியது.

முழுவதும் உள்நாட்டு தயாரிப்பிலேயே இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டது. முதல் முறையாக நீண்ட தூரம் நிலப்பரப்புக்கு சென்று தாக்கக்கூடிய கப்பல் ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை சோதனை ஒடிசாவில் உள்ள கடற்கரையில் வருகிற 6 அல்லது 8-ந் தேதி நடைபெறும் என்று டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அதிகாரி கூறும்போது, “திட்டமிட்டபடி புதன்கிழமை ஏவுகணை சோதனை நடத்தப்படும். வானிலையை பொறுத்து இதில் மாற்றம் ஏற்படலாம். இந்த ஏவுகணை 700 கி.மீ.-க்கு மேல் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

கடந்த ஆகஸ்டு 11-ந் தேதியன்று ஐ.டி.சி.எம். ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. டர்போபாண் என்ஜின் சிறப்பாக செயல்பட்டாலும், கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஏவுகணை முழு வீச்சை கடக்கவில்லை. குறைபாடுகள் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது முழு அளவிலான சோதனை நடத்தப்படுகிறது.