Tamilசெய்திகள்

கட்டுப்பாடு இல்லை என்றால் அதிமுக-வில் எப்போதும் வெற்றி பெற முடியாது – சி.வி.சண்முகம் பேச்சு

விழுப்புரத்தில் அ.தி.மு.க., உட்கட்சி அமைப்பு தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விசண்முகம் தலைமை தாங்கி பேசினார்.

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும். பொதுமக்கள் கோபத்தையும், அதிருப்தியையும் பொது தேர்தலில் தான் காட்டுவர். உள்ளாட்சித் தேர்தலில் வெளிப்படுத்த மாட்டார்கள்.

கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் 21 ஒன்றியங்களிலும் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் எதிர்கட்சிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சிக்கு தான் ஓட்டளிப்பர்.

ஆளும் கட்சிக்கு ஓட்டளித்தால் வீடு, சாலைகள் கிடைக்கும் என மக்கள் எண்ணுவர். உள்ளாட்சித் தேர்தல் முடிவு நிலையானது இல்லை. அதை நினைத்து வருத்தப்படக் கூடாது.

சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கு கிராமங்களில் கட்சி கட்டமைப்பு முறையாக இருக்க வேண்டும். கிராம பகுதியில் கட்சி கட்டமைப்பு வலுவாக இல்லை என்றால் ரூ. 50 கோடி செலவு செய்தாலும் எந்த தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.