Tamilசெய்திகள்

கட்சி தலைமை என்னை அவமதித்து விட்டது – ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் கவலை

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதால் சம்பாய் சோரன் முதல் மந்திரியாக பதவி ஏற்றார். அவர் பிப்ரவரி 2-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரியாக இருந்தார். இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி சம்பாய் சோரன் பா.ஜ.க.வில் இணையப் போவதாக வதந்திகள் பரவின.

இந்நிலையில், சம்பாய் சோரன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைமை தன்னை அவமதித்து விட்டது. எனது பதவிக்காலத்தில் கடமைகளை முழு அர்ப்பணிப்புடன் செய்தேன். ஒரு முதலமைச்சரின் நிகழ்ச்சிகளை வேறொருவர் ரத்து செய்வதைவிட ஜனநாயகத்தில் அவமானம் வேறு இருக்கமுடியுமா?

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது, தனிக்கட்சி தொடங்குவது அல்லது வசதியான வேறு ஒரு துணையுடன் இணைந்து பயணிப்பது என அனைத்து சாய்ஸ்களும் என் முன் உள்ளன. நான் உள்ளிருந்து உடைந்தேன். என்ன செய்வதென புரியவில்லை. இரு நாட்கள் அமைதியாக உட்கார்ந்து சுயபரிசோதனை செய்து, முழு சம்பவத்திலும் என் தவறைத் தேடிக்கொண்டிருந்தேன்.

எனக்கு அதிகார பேராசை கொஞ்சம் கூட இல்லை. ஆனால் என் சுயமரியாதையை யாரிடம் காட்டுவது? எனது சொந்த மக்கள் படும் வேதனையை நான் எங்கே வெளிப்படுத்த முடியும்? என பதிவிட்டுள்ளார்.