Tamilசெய்திகள்

கடவுளை வழிபட திருத்தணி செல்கிறேன் – பா.ஜ.க தலைவர் முருகன் பேட்டி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பா.ஜ.க. சார்பில் இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரை முருகபெருமானின் அறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க.வினர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசு சார்பில் பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. இதனால் திருத்தணியில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

இதையடுத்து வேல் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாஜக வேல் யாத்திரை தொடங்க உள்ள திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து திருத்தணிக்கு புறப்படும் முன் தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடவுள் முருகனை கும்பிடுவது வழிபாட்டு உரிமை என்பதால் திருத்தணிக்கு புறப்படுகிறேன் என்று கூறிய அவர் திருத்தணிக்கு புறப்பட்டார்.