Tamilசெய்திகள்

கடலூர் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல அனுமதி

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடந்த 9-ந்தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல கூடாது என்று கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு, மீன்வளத்துறை உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக நேற்று வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீன்பிடி துறைமுகங்களில் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இன்று முதல் தினசரி இழுவை விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. கடலில் தங்காமல் காலையில் மீன்பிடிக்கச் சென்று விட்டு மாலையில் கரை திரும்பும் படகுகளுக்கு மட்டும் இன்று முதல் கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடலுக்குச் செல்லும் படகுகள் உயிர்காப்பு உபகரணங்கள், தொலைதொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை தவறாமல் எடுத்துச் சென்று பாதுகாப்பாக மீன்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. வரும் 16-ந்தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், கடலில் தங்கி மீன்பிடிக்கும் விசைப்படகுகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.