Tamilசெய்திகள்

கடந்த நிதியாண்டில் 38,850 பேர் மத்திய அரசு வேலை பெற்றுள்ளனர் – மத்திய அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் தகவல்

பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக பதிலளித்த பிரதமர் அலுவலகம் மற்றும் பணியாளர் துறை இணை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளதாவது:

வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 7,22,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரந்தர வேலை கிடைத்துள்ளது.

கடந்த நிதியாண்டில் மட்டும் 38,850 பேர் மத்திய அரசுத் துறைகளில் நிரந்தர வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் மத்திய அரசு சுயவேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கும் தனி நபர்கள் தொழில் தொடங்குவதற்கும் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.

சாலையோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித் திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி தொடங்கப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் இலவசக் கடன் மூலம் தங்களது தொழிலை மீண்டும் தொடங்குவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.