Tamilசெய்திகள்

கடந்த ஆண்டு 15 லட்சம் வெளிநாட்டினர் இந்தியா வந்துள்ளனர் – உள்துறை அமைச்சகம் தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் 15.24 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வந்துள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 74.39 சதவீதம் பேர் 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியா வந்துள்ள வெளிநாட்டினரில் அமெரிக்கர்களே அதிகம் ஆவர்.

அந்த வகையில் 4.29 லட்சம் அமெரிக்கர்கள் கடந்த ஆண்டு இந்தியா வந்துள்ளனர். அடுத்ததாக வங்காளதேசத்தவர்கள் 2.40 லட்சம் பேர், இங்கிலாந்தைச் சேர்ந்த 1.64 லட்சம் பேர், கனடா மற்றும் நேபாள நாட்டினர் முறையே 80,437 பேர் மற்றும் 52,544 பேரும் இந்தியா வந்துள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, போர்ச்சுக்கல், பிரான்ஸ் நாட்டினரும் அதிக அளவில் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்துள்ளனர்.