Tamilசெய்திகள்

கஞ்சா வியாபாரிகளால் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட சிறுமி மீட்பு

போலீசார் நடத்தி வரும் கஞ்சா வேட்டையில் சிக்கிய இளம்பெண்ணும், அவர் சீரழிக்கப்பட்ட விதமும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. போதை பொருள் ஒழிப்பு வேட்டை தமிழகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக கஞ்சா வியாபாரிகளை வேட்டையாடி வருகிறார்கள்.

ஒவ்வொரு போலீஸ் சரகத்திலும் கஞ்சா விற்பது யார்? என்பது போலீசுக்கு தெரிந்ததுதான். தற்போது போலீசார் தேடி வருவதால் எல்லோரும் ஓட்டம் பிடித்து உள்ளார்கள். தாம்பரம் அருகே உள்ள சேலையூரில் கஞ்சா வியாபாரிகள் இருவர் ஒரு வீட்டில் இருப்பதை அறிந்து போலீசார் அங்கு விரைந்து உள்ளார்கள்.

அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்ததும் கஞ்சா வியாபாரிகள் இருவரும் சிக்கினார்கள். அவர்களை பிடித்ததும் போலீசார் வீட்டுக்குள் சோதனை நடத்தி இருக்கிறார்கள். அப்போது சுமார் 17 வயதான சிறுமி ஒருவர் பரிதாபமாக அந்த வீட்டுக்குள் தவித்துக் கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். அந்த சிறுமியை மீட்டு குழந்தை நல பாதுகாப்பு அமைப்பிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்த சிறுமி தான் அனுபவித்து வரும் சித்ரவதையை கண்ணீர் மல்க தெரிவித்து உள்ளார்.

அவர் கூறியதாவது:-

பரங்கிமலையில் எனது பெற்றோருடன் வசித்து வந்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மாவுக்கு மனநலம் பாதித்தது. எங்களால் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று முறையான சிகிச்சை அளிக்க முடியவில்லை.

அம்மாவின் நிலையை பார்த்ததும் அப்பா எங்களை விட்டு சென்று விட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மடிப்பாக்கத்தில் உள்ள அரசியல்வாதி ஒருவரது வீட்டுக்கு உதவி கேட்டு சென்றேன். வீட்டு வேலைகள் தெரியும் என்றதும் வீட்டில் தங்க வைத்தார். அடுத்த சில நாட்களில் விசுவநாதன் என்பவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார்கள். விசுவநாதன் வீட்டுக்கு சென்ற பிறகுதான் எனக்கு பாலியல் சித்ரவதை தொடங்கியது. வீட்டுக்குள் அடைத்து வைத்து தொடர்ந்து என்னிடம் உறவு கொண்டார். அங்கு வரும் அவரது நண்பர்களின் ஆசைக்கு இணங்கும் படியும் வற்புறுத்தினார். நான் மறுத்தால் அடி விழும். என்னால் அங்கிருந்து தப்பிக்கவும் முடியவில்லை.

அப்போதுதான் ரூ.10 ஆயிரம் கொடுத்து அந்த அரசியல்வாதியிடம் இருந்து என்னை விலைக்கு வாங்கியிருப்பதாக கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

கஞ்சா வியாபாரிகள் அந்த சிறுமியை பாலியல் கொடுமை செய்து இருக்கிறார்கள். விசுவநாதன் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் இதை அறிந்த திருவண்ணாமலையை சேர்ந்த அவரது கூட்டாளியான பாரதி என்பவர் விசுவநாதன் வீட்டுக்கு சென்று அந்த சிறுமியை சில நாட்கள் தன்னுடன் அனுப்புமாறு கூறியிருக்கிறான். அவன் மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விசுவநாதனை அடித்து விரட்டி விட்டு அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டிருக்கிறார்கள் என்றனர்.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து மாடம்பாக்கம் விசுவநாதன், கீர்த்திராஜன், பள்ளிக்கரணை ஹரிபிரசாத், திருவண்ணாமலை பாரதி, பள்ளிக்கரணை யுவராஜ், கீரப்பாக்கம் ஜி, பெருங்குடி நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 1,750 கிலோ கஞ்சா பொட்டலங்கள், நாட்டு துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

திருவான்மியூரை சேர்ந்த தனசேகரன் என்பவரை கொலை செய்ததற்காக பாரதியை தாக்கி இருக்கிறார்கள். அதில் தப்பித்த பாரதி தன்னை தாக்கிய குபேந்திரனை தாக்கவே வெடிகுண்டு மற்றும் நாட்டு துப்பாக்கியை வாங்கி வைத்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நாகராஜ் மீது கொலை, கொள்ளை முயற்சி வழக்குகள் பதிவாகி உள்ளது. ஹரிபிரசாத், யுவராஜ் மற்றும் நாகராஜ் மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கோர்ட்டு அனுமதி பெற்று இன்று மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். பரிசோதனை முடிவு வெளியே வந்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடரும்.