Tamilசெய்திகள்

ஓய்வூதியத் திட்டம் விவகாரம் – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க பதிலடி

கடந்த இரு தினங்களுக்கு முன் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஓய்வூதிய திட்டமானது, மத்திய அரசு ஊழியராக, குறைந்தபட்சம் 10 ஆண்டு பணியாற்றியவர்கள் தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது. 10 ஆண்டு பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மால்லிகார்ஜூன கார்கே விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் இருக்கும் ‘யு’ என்பது, மோடி அரசின் பல ‘யு டர்ன்’களை குறிப்பிடுவதாகவும், இன்டெக்சேசன் தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு, வக்பு மசோதாவை கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பியது, ஒலிபரப்பு மசோதா வாபஸ், லேட்ரல் என்ட்ரி வாபஸ், இப்போது ஒருமித்த ஓய்வூதியம் என அடுத்தடுத்து மத்திய அரசு தன் முடிவுகளில் இருந்து பின்வாங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் கார்கே-வின் விமர்சனத்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் பதில் கொடுத்துள்ளார். காங்கிரஸ் விமர்சனத்திற்கு ரவி சங்கர் பிரசாத் அளித்தள்ள பதில் வருமாறு:-

இமாச்சல் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் காங்கிரஸ் தற்போது யு-டர்ன் அடித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறது. மக்கள் வாக்களித்து ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என பிரியங்கா தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்திருந்தார்.

இந்த காங்கிரஸ் அறிவிப்புகளை மட்டும் வெளியிடுமா அல்லது அதையும் செயல்படுத்துமா? பொதுவாக காங்கிரசும், குறிப்பாக ராகுல் காந்தியும், இமாச்சலப் பிரதேசத்தில் வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தினீர்களா என்று நாட்டு மக்களுக்குச் சொல்லுங்கள். வாக்குகளுக்காக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களி ஏமாற்றி வருகின்றனர்.

(மத்திய அரசு) ஊழியர்களின் கவலைகளைக் கேட்டு புரிந்துகொண்டு, அதுகுறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து, அர்த்தமுள்ள முடிவை எடுத்ததற்காக பிரதமர் மோடிக்காக பெருமைப்படுகிறோம். இதற்காக அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ராகுல் காந்தி என்ன செய்கிறீர்கள்? நீங்கள் எவ்வளவுதான் பொய்யை உண்மை என மக்களை நம்பவைப்பீர்கள். எப்போதாவது உண்மையைச் சொல்லுங்கள். மேலும் நீங்கள் ஏதாவது சொன்னால், அதைச் செய்ய வேண்டும். உங்களால் முடியவில்லை என்றால் சொல்லக்கூடாது.

கவனமாக பரிசீலித்த பிறகு முடிவுகளை எடுக்க வேண்டும். அடிமைத்தனம் இங்கு வேலை செய்யாது.

இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.