Tamilவிளையாட்டு

ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகிறது

13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ( 50 ஓவர்) இந்தியா நடத்துகிறது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. உலக கோப்பை கிரிக்கெட்டில் 10 நாடுகள் பங்கேற்கின்றன.

போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன. எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் தற்போது நடைபெற்று வருகிறது. உலக கோப்பை போட்டிக்கான வரைவு அட்டவணை ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இதைதொடர்ந்து சென்னை, பெங்களூரில் தாங்கள் விளையாடும் இடங்களை மாற்றுமாறு ஐ.சி.சி. யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை ஐ.சி.சி.யும், இந்திய கிரிக்கெட் வாரியமும் நிராகரித்து இருந்தன. இதனால் உலககோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை விரைவில் வெளியாகும் என்று கருதப்பட்டது.

இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்று வெளியாகுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மும்பையில் உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை அறிவிக்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந்தேதி சென்னையில் சந்திக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் நடத்தப்படுகிறது.

அரைஇறுதி ஆட்டங்கள் நவம்பர் 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடைபெறுகிறது. ஒரு அரைஇறுதியை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அதை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மற்றொரு அரைஇறுதி மும்பை வான்கடே மைதானத்தில் நடத்தப்படுகிறது. இறுதிப்போட்டி நவம்பர் 19-ந்தேதி அகமதாபாத்தில் நடக்கிறது. உலக கோப்பை போட்டிக்கான 48 போட்டிகளும் 10 நகரங்களில் நடக்கிறது. அகமதாபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஐதராபாத், தர்மசாலா, லக்னோ, புனே ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. கவுகாத்தி, திருவனந்தபுரத்தில் பயிற்சி போட்டிகள் நடத்தப்படுகிறது.