X

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதை தொடர்ந்து 2 அணைகளில் இருந்தும் தமிழக காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வருகிறது.

இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. எனினும் பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது. இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து காலை நிலவரப்படி 30 ஆயிரம் கனஅடியானது.

ஒகேனக்கலில் தொடர்ந்து 27-வது நாளாக அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க தடை நீடிக்கிறது. நீர்வரத்து 30,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.