Tamilவிளையாட்டு

ஐ.பி.எல் கிரிக்கெட் – ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி

ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய படிக்கல், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லருடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் படிக்கல் 37 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து ஹெட்மயர் இறங்கி, பட்லருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். பட்லர் அரை சதமடித்து அசத்தினார்

இறுதியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. பட்லர் 70 ரன்னுடனும், ஹெட்மயர் 42 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கி விளையாடிய பெங்களூரு அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் சபாஸ் அகமது 45 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 44 அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

இதையடுத்து அந்த அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.