ஐ.எஸ்.எல் கால்பந்து – சென்னை அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் ஏற்கனவே கோவா, கொல்கத்தா, பெங்களூரு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் எஞ்சிய ஒரு இடத்துக்கு சென்னையின் எப்.சி., மும்பை சிட்டி அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், மும்பையில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 87-வது லீக் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியின் கடைசி கட்டத்தில் 83-வது நிமிடத்தில் சென்னை அணியின் லுசியன் கோயன் சிறப்பாக ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், சென்னை அணி 1-0 என்ற கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி அரை இறுதியில் நுழைந்தது.

சென்னை அணி தாங்கள் விளையாடிய 17 போட்டிகளில் 8 வெற்றி, 5 தோல்வி, 4 டிரா என மொத்தம் 28 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news