Tamilவிளையாட்டு

ஐபில் கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடக்கும் – பிசிசிஐ அறிவிப்பு

இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டி ஆண்டுதோறும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளி வைக்கப்பட்டதால் அந்த காலக்கட்டத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், ஐக்கிய அரபு எமிரேட்சில் போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி ஐ.பி.எல். போட்டி வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று விட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தவிர மற்ற அணிகள் பயிற்சியை தொடங்கி விட்டன.

சென்னை அணியில் தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 2 வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இதனால் சி.எஸ்.கே. அணியின் பயிற்சி தாமதம் ஆனது. நாளை முதல் சி.எஸ்.கே. அணி வீரர்கள் பயிற்சியை தொடங்குகிறார்கள்.

ஐ.பி.எல். தொடங்குவதற்கு இன்னும் 16 தினங்கள் உள்ள நிலையில் போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. அட்டவணை வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். போட்டியின் தற்போதைய நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்கள். இனதால் ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளன.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் பொருளாளர் அருண்துமால் கூறியதாவது:-

அனைத்து சி.எஸ்.கே. வீரர்களுக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.

வழிகாட்டு நெறிமுறைகளை வீரர்கள் பின்பற்றி வருகிறார்கள். பார்வையாளர்கள் இல்லாமல் ஐ.பி.எல். போட்டி நடைபெற உள்ளது. எனவே எந்த பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.