Tamilவிளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால்

ஐபிஎல் 16-வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஐபிஎல்லின் 1000-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடி சதத்தால் 212 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல்லில் இளம் வயதில் சதமடித்த 4-வது வீரர் என்ற சாதனையை படைத்தார். 21 வயது 123 நாட்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்துள்ளார். இதன்மூலம் 22 வயதில் சதமடித்த சஞ்சு சாம்சனை 5-ம் இடத்திற்கு தள்ளி 4-ம் இடத்தை பிடித்துள்ளார்.

மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய மூவரும் முதல் 3 இடங்களில் உள்ளனர். அவர் 62 பந்தில் 16 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 124 ரன்களை குவித்தார். தேசிய அணியில் இடம்பிடிக்காத ஒரு வீரர் ஐபிஎல்லில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.