Tamilவிளையாட்டு

ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல் – 2ம் இடத்திற்கு முன்னேறிய ஜோஸ் பட்லர்

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. அந்த அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.

நடப்பு ஐபிஎல் தொடரில் 4 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் கைப்பற்றினார்.

இந்நிலையில், நேற்று முன் தின போட்டியில் ஜோஸ் பட்லர் புதிய சாதனை படைத்தார். ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னரை பின்னுக்குத் தள்ளி பட்லர் 2-வது இடத்தை பிடித்தார். பட்லர் இதுவரை 863 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்தப் பட்டியலில் பெங்களூரு அணியின் விராட் கோலி (973 ரன்கள் – 2016 ஆம் ஆண்டு ) முதல் இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் டேவிட் வார்னர் (848 ரன்கள் – 2016) உள்ளார்.