Tamilவிளையாட்டு

ஐபிஎல் தொடரை வெல்ல சிஎஸ்கே-வுக்கு வாய்ப்பு – வாட்சன் நம்பிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா) ‘யூடியூப்’ சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘சென்னை அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் நிலைமையை நன்றாக புரிந்து கொண்டு நெருக்கடியான தருணத்திலும் திறமையை வெளிப்படுத்த முடியும். தரமான மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் அங்கம் வகிப்பதால் இந்த ஆண்டு எங்களுக்கு சிறப்பானதாக அமையும் என்றும், கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றும் நம்புகிறோம். நாங்கள் அதிக தவறுகள் இழைக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் விரைவில் முடிந்த அளவுக்கு வேகமாக செயல்பட முயற்சிக்க வேண்டியது அவசியமானதாகும்.

கடந்த 4 வருடங்களாக நான் அவ்வப்போது தான் 20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறேன். தற்போது எனக்கு நிறைய புரிதல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் திறமையை மேம்படுத்துவது என்பது இன்னும் சவாலானது தான். 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். இறுதிப்போட்டி (சதம் அடித்தது) மட்டுமின்றி அந்த தொடர் முழுவதும் எனக்கு நன்றாக அமைந்தது. கடந்த ஆண்டில் (2019) சில ஆட்டங்களில் சரியாக ரன்கள் எடுக்காவிட்டாலும் என் திறமை மீது நம்பிக்கை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் என்னை தக்கவைத்தது. மற்ற அணிகளாக இருந்தால் நிச்சயம் என்னை நீக்கி இருப்பார்கள்’ என்றார்.