ஐபிஎல் கிரிக்கெட் – டெல்லிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் வெற்றி

ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் – விருத்திமான் சாஹா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

இருவரையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று டெல்லி பந்து வீச்சாளர்களுக்கு தெரியாமல் போனது. 8.4 ஓவரில் ஐதராபாத் 100 ரன்னைத் தொட்டது.

வார்னர் 34 பந்தில் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து மணிஷ் பாண்டே களம் இறங்கினார்.

வார்னர் ஆட்டமிழந்த பின் சாஹா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 27 பந்தில் அரைசதம் அடித்தார்.
சாஹா 45 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. மணீஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 31 பந்தில் 44 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ரகானேவும் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர் சிறப்பாக பந்து வீசி டெல்லி அணியை கட்டுப்படுத்தினர். தவான் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

ரகானே 26 ரன்னும், ஹெட்மயர் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகினர். அந்த அணியின் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 36 ரன் எடுத்தார்.

இறுதியில், டெல்லி அணி 131 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஐதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐதராபாத் அணி சார்பில் ரஷீத் கான் சிறப்பாக பந்து வீசி 7 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். சந்தீப் சர்மா, நடராஜனாகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றி மூலம் ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools