Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமம் – ரூ.50 ஆயிரம் கோடி வரை ஏலம் எடுக்க தயாராக இருக்கும் நிறுவனங்கள்

கிரிக்கெட் மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தை பெற்று தருவது ஐ.பி.எல். போட்டியாகும். இதனால் ஐ.பி.எல். போட்டிக்கான ஒளிபரப்பு உரிமத்தை பெறுவதில் எப்போதுமே கடும் போட்டி இருக்கும். தற்போது ஐ.பி.எல். போட்டியை ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பி வருகிறது. அந்த நிறுவனம் 2018 முதல் 2022 வரை ரூ.16 ஆயிரத்து 347.5 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையை பெற்று இருந்தது.

அதற்கு முன்பு 2008 முதல் 2017 வரை சோனி நெட்வொர்க் ரூ.8 ஆயிரத்து 200 கோடிக்கு பெற்று ஒளிபரப்பு இருந்தது. ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம் இந்த ஆண்டுடன் முடிவடைவதால் அடுத்த 5 ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமம் வழங்கும் நடைமுறையை கிரிக்கெட் வாரியம் தொடங்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.

ஆன்லைன் மூலம் ஒளிபரப்பு உரிமையை வழங்கும் ஏலம் நடை முறையை இந்த வாரத்தில் தொடங்கும். ஏப்ரல் முதல் மே மாதத்தில் ஏல பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10 அணிகள் விளையாடுவதாலும், ஐ.பி.எல். போட் டிக்கான மதிப்பு உயர்ந்து வருவதாலும் ஒளிபரப்பு உரிமத்துக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டுக்கான ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி ஒளிபரப்பு உரிமம் மதிப்பு ரூ.40 ஆயிரம் கோடியை தாண்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்து இருந்தார். தற்போது நிபுணர்களின் கூற்றுப்படி ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என்று கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது.

ஸ்டார் மற்றும் டிஸ்னி இந்தியா நிறுவனம், சோனி பிச்சர்ஸ் நெட்வெர்க், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அமைப்பான வியாகாம், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமையை பெற கடுமையாக போட்டியிடும் என்று தெரிகிறது.