ஐபிஎல் கிரிக்கெட் – ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை வெற்றி

ஐபிஎல் தொடரின் 29-வது லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் டோனி பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சர்ம் கர்ரன், டு பிளசிஸ் களமிறங்கினர்.

டு பிளசிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து வாட்சன் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய சாம் கர்ரன் 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 31 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த அம்பதி ராயுடு வாட்சனுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

14வது ஓவரில் சென்னை அணி 100 ரன்களை கடந்தது. பொறுப்புடன் ஆடிய ராயுடு 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வாட்சனும் 42 ரன்னில் வெளியேறினார்..

எம்எஸ் டோனியும், ஜடேஜாவும் பொறுப்புடன் ஆடினர். டோனி 13 பந்தில் 21 ரன் எடுத்து வெளியேறினார். பிராவோ டக் அவுட்டானார்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. 10 பந்தை சந்தித்த ஜடேஜா 25 ரன்னிலும், 2 பந்தை சந்தித்த சாஹர் 2 ரன்னையும் எடுத்து களத்தில் இருந்தனர்.

ஐதராபாத் அணியின் சந்தீப் சர்மா, நடராஜன், கலீல் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பிரிஸ்டோ தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 13 பந்துகளை சந்தித்த வார்னர் 9 ரன்களை எடுத்து சாம் கர்ரன் பந்துவீச்சில் வெளியேறினார்.

அடுத்து வந்த மணீஷ் பாண்டே 4 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய வில்லியம்சன் தொடக்க வீரர் பிரிஸ்டோவுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

24 பந்துகளை சந்தித்த பிரிஸ்டோவ் 23 ரன்னில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய பிரியம் கர்ருடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பிரியம் கர் 16 ரன்னிலும், அடுத்து வந்த விஜய் சங்கர் 12 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார். ஒற்றை வீரராக போராடிய வில்லியம்சன் 39 பந்தில் 7 பவுண்டரிகள் உள்பட 57 ரன்கள் குவித்து கரன் சர்மா பந்து வீச்சில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர்கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

சென்னை அணியின் கரன் சர்மா, பிராவோ தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools