Tamilவிளையாட்டு

ஐசிசி-யின் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் தேர்வு

வேகமாக வளர்ந்து வரும் இந்திய பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைக்கு எதிரான உள்நாட்டுத் தொடரின் போது ஸ்ரேயாஸ் அய்யரின் அபாரமான ஆட்டம் காரணமாக இந்த விருதைப் பெற்றிருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் விருத்தியா அரவிந்த், நேபாளத்தின் திபேந்திர சிங் ஐரி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார் அய்யர்.

வலதுகை பேட்ஸமேனான ஸ்ரேயாஸ் அய்யர், அகமதாபாத் மைதானத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 80 ரன்கள் எடுத்தது, அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் அசத்தி வருகிறார். 3 போட்டிகளில் 204 ரன்கள் குவித்த அய்யர், 174.36 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்.

பெண்கள் பிரிவில் நியூசிலாந்து ஆல் ரவுண்டர் அமெலியா கெர், பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 21 வயதான கெர், இந்தியாவுக்கு எதிரான தொடரின் போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்ததால், சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.