Tamilவிளையாட்டு

ஐசிசியின் சிறந்த ஒருநாள் போட்டி அணி – 2 இந்திய வீரர்கள் இடம் பிடித்தனர்

ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை ஐசிசி வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் அனைத்து வீரர்களின் செயல்பாட்டை வைத்து சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள், டி20, டெஸ்ட் அணிகளை ஐசிசி அறிவிக்கும்.

அந்த வகையில் ஐசிசி நேற்று முன்தினம் 2022-ம் ஆண்டுக்கான ஆடவர் டி20 அணி மற்றும் பெண்கள் டி20 அணியை அறிவித்தது. இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான ஒருநாள் ஆடவர் அணியை ஐசிசி நேற்று அறிவித்தது. இந்த அணிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்திய அணியில் இருந்து ஒரு பேட்ஸ்மேன், ஒரு பந்துவீச்சாளர் என இரு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமும், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து 3-வது இடத்துக்கு வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப்பும், 4-வது இடத்துக்கு இந்திய வீரர் ஸ்ரேயஸ் அய்யரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 5-வது இடத்தில் நியூசிலாந்தின் விக்கெட் கீப்பட் பேட்ஸ்மேன் டாம் லதாமும், ஆல் ரவுண்டர்களாக 6-வது மற்றும் 7-வது இடத்தில் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசாவும், வங்கதேசத்தின் மஹதி ஹசன் மிராசும் உள்ளனர். இதையடுத்து, பந்துவீச்சாளர்களாக 7 முதல் 11 இடங்களுக்கு அல்ஜாரி ஜோசப் (வெஸ்ட் இண்டீஸ்), முகமது சிராஜ் (இந்தியா), டிரெண்ட் போல்ட் (நியூசிலாந்து), ஆடம் ஜாம்பா (ஆஸ்திரேலியா) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.