Tamilசினிமா

ஏழைகளுக்கு உணவு வழங்குங்கள் – நடிகை ராஷி கண்ணா வேண்டுகோள்

தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவக் கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசி இருப்பதாவது: “கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து சாமானிய மக்கள் படும் பாட்டை சகிக்க முடியவில்லை. நிறைய குடும்பங்கள் கொடுமையான சூழலில் இருக்கின்றன. தொண்டு நிறுவனம் மூலம் என்னால் முயன்ற உதவிகளை வழங்கி வருகிறேன். இன்று லட்சக்கணக்கான மக்கள் உயிர் வாழத் தேவைப்படுவது ஆக்சிஜனும், உணவும்தான்.

இந்த பெருந்தொற்றால் பசியின் குரல் பலரின் காதுகளில் விழுவதில்லை. வாழ்வாதார பற்றாக்குறையாலும், வருமானம் குறைந்து போனதாலும் அடிப்படைத் தேவையான உணவுக்கே வழியில்லாமல்போய், இந்த பெருந்தொற்றின் இரண்டாம் அலை பல ஏழைக்குடும்பங்களை பட்டினியில் தள்ளி விட்டது. கொரோனா வைரசுக்கு முன்னால், பசியே அவர்களை கொன்று விடும்போல் உள்ளது. பல உதவி அமைப்புகளுக்கு பணம் பற்றாக்குறையாக உள்ளது.

நான் தனிப்பட்ட முறையில் இந்த பெருந்தொற்று நேரத்தில் பசியால் தவிக்கும் ஏழைகளுக்கு சாப்பாடு கொடுக்கின்றேன். இப்போது உங்கள் உள்ளங்களை கொஞ்சம் திறந்து உதவ வேண்டிய நேரம் இது. உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாவிட்டாலும் ஒருவருக்காவது உணவு கொடுங்கள்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.