Tamilசெய்திகள்

எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தம்! – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை 2 வருடங்களுக்கு (2020-2021 மற்றும் 2021-2022) மட்டும் நிறுத்தி வைக்கிறோம் என்று அறிவித்துவிட்டு, இப்போது 2019-2020-ம் ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கிவிட்ட நிலையில், அந்த நிதியையும் ரத்து செய்ய மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

உரிமையின் அடிப்படையில் கொடுக்க வேண்டியதை, கொடுக்காமல் நிறுத்தி வைப்பதும், கொடுத்ததைப் பாதியில் பறிப்பதும் பண்பாடாகாது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சீர்செய்யவோ, நெருக்கடி சூழ்ந்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவோ தயாராக இல்லாத மத்திய அரசு, இப்படி மக்கள் பிரதிநிதிகளுக்குரிய உரிமைகளையும் பறித்து, 3 வருடத் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்துவது வேதனையானது மட்டுமல்லாமல், மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் செயலும் ஆகும்.

சுப்ரீம் கோர்ட்டே அங்கீகரித்துள்ள தொகுதி மேம்பாட்டு நிதியை இப்படி நிறுத்துவது, கொரோனா பணிகளில் மத்திய அரசுக்கே போதுமான ஆர்வம் இல்லையோ? என்ற ஐயப்பாட்டினை எழுப்புவதுடன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம் தொகுதி மக்களுக்குத் தேவைப்படும் எந்த ஒரு பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு நடந்துகொள்வது மக்களாட்சித் தத்துவத்திற்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் மாறானது.

பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களே கூட, இந்த முடிவை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், மவுனமாக வேதனையுறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே 2019-2020-ம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி, மக்களுக்குத் துரோகம் இழைத்திடும் ‘சுற்றறிக்கை’யை மட்டுமின்றி, ஏற்கனவே இரு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உத்தரவையும் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதேபோல், மத்திய சென்னை தொகுதி தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தற்போது நாடெங்கும் பரவி வரும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக, 2020-2021 மற்றும் 2021-2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்திடும் அறிவிப்புக்கு அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தங்களது எதிர்ப்பை தெரியப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் அந்த சர்ச்சைகள் தீருவதற்கு முன்னரே, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கடந்த ஆண்டு (2019-2020) ஒதுக்கப்பட்ட தலா ரூ.5 கோடியை மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஒதுக்கி, அதில் பெரும்பாலான பணிகள் துவங்கக் கூடிய நேரத்தில் மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அந்த நிதியை வழங்காமல், அதில் பாதிக்கு மேற்பட்ட தொகையை கொரோனா நிவாரணப் பணிகளை காரணம் காட்டி ரத்து செய்யப் போவதாக சுற்றறிக்கை மூலம் தெரிவித்திருப்பது என்பது, 3 ஆண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியையும் முடக்குவது போலாகும். மத்திய அரசின் இந்த எதேச்சதிகார முடிவு ஏற்புக்குரியது அல்ல.

எனவே, சமீபத்திய சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டுக்காக 2019-2020 நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்ட முழு தொகையையும் உடனடியாக வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *