Tamilசினிமா

என் படத்தில் ரசிகர்கள் நடனத்தை தான் எதிர்ப்பார்க்கிறார்கள் – பிரபுதேவா பேச்சு

பிரபு தேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தேள்’. ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். அம்மாவாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் குறித்து பிரபுதேவா கூறும்போது, ‘இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பை விடவும் பலமடங்கு அற்புதமான உழைப்பை இப்படத்திற்கு தந்துள்ளார். ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது நடனம் தான். ஆனால், இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன்.

நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை செக் செய்து கொண்டே இருப்பார் இயக்குனர். நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார். ஈஸ்வரி மேடம் தமிழில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார். அவரது நடிப்பு இப்படத்தில் மிக முக்கிய அம்சமாக இருக்கும். இப்படம் மிக அழுத்தமான படைப்பாக, அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும்’ என்றார்.