X

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்டு

திருவண்ணாமலை குற்ற ஆவணக் காப்பக ஏ.டி.எஸ்.பியாக வெள்ளத்துரை பணியாற்றி வந்தார். 2003ல் சென்னையில் பிரபல தாதாவான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்தவர் வெள்ளத்துரை. இந்த நிலையில் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை திடீரென்று இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

2013ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான விசாரணை முடிவில் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2013ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தியில் ராமு என்கிற குமார் என்ற கொக்கி குமார் என்பவர், போலீஸ் காவலில் இருந்தபோது மரணமடைந்த வழக்கில் வெள்ளத்துரைக்கு தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் வெள்ளத்துரை மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் தமிழக அரசு அவரை சஸ்பெண்ட் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிபி சங்கர் ஜிவால் வெள்ளத்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என பரிந்துரை செய்துள்ளார். ஆனாலும், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடையிலான பனிப்போரினாலே தான் வெள்ளதுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.